Event Description

ஆலயப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென்றால் அனைத்து ஆலயங்களும் ஒரு குடையின் கீழ் வலுவாக இருக்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்

சபாக் பெர்ணம்:

ஆலயப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென்றால் அனைத்து ஆலயங்களும் ஒரு குடையின் கீழ் வலுவாக இருக்க வேண்டும்.

மஹிமா தலைவர் ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

மஹிமா எனப்படும் இந்து ஆலயங்கள், அமைப்புகள் ஒருங்கிணைப்புப் பேரவையின் சந்திப்புக் கூட்டம் சபாக் பெர்ணமில் நடைபெற்றது.

26க்கும் மேற்ப்பட்ட ஆலய நிர்வாகங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன. அதே வேளையில் இங்குள்ள ஆலயங்களின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

குறிப்பாக மஹிமாவில் இணைவதற்கான மனுக்களை அவர்கள் சமர்பித்தனர்.

நாட்டில் உள்ள ஆலயப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதற்கு ஆலய நிர்வாகங்கள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் இணைந்து வலுவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அரசாங்கம் நமது பிரச்சினைக்கு கண்டிப்பாக செவிசாய்த்தாக வேண்டும்.

இதன் அடிப்படையில் மஹிமா அடுத்தாண்டு மாபெரும் ஆலய மாநாட்டை நடத்தவுள்ளது. மூன்று நாட்களுக்கு மிகப் பெரிய சமய விழாவாக இது நடைபெறவுள்ளது. 

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ  நடராஜாவின் ஆலோசனையின் அடிப்படையில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

ஆக நாட்டில் உள்ள ஆலயங்கள் இம்மாநாட்டிற்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என டத்தோ சிவக்குமார் கூறினார்.