Event Description

பிரதமரின் நிலைப்பாட்டை மஹிமா ஆதரிக்கிறது; ஆலயங்களை காப்பாற்றும் முயற்சியாக இதை பார்க்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிரதமர் டத்தோ அன்வாரின் அறிக்கைக்கு ஆதரவாக மஹிமா மத குரல் கொடுத்துள்ளது.

நாட்டில் உள்ள இந்து ஆலயங்களை மறுசீரமைத்து காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கையைப் பார்க்க வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
விதிமுறைகளுக்கு இணங்காத வழிபாட்டுத் தலங்களை  அகற்றும் உள்ளூர் ஊராட்சித் துறை அதிகாரிகளின் நடவடிக்கை, இந்துக்களை அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அல்ல.

மாறாக, எதிர்காலத்தில் நில ஆக்கிரமிப்பு, கட்டாய இடிப்பு போன்ற பிரச்சினைகளைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருக்கும்.

குறிப்பாக இந்நடவடிக்கை கோபத்தைத் தூண்டுவதற்காக அல்ல.

ஒரு தீர்வைக் கண்டுபிடித்து கோயிலைக் காப்பாற்றுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது நாம் செயல்படத் தவறினால், பின்னர் சட்டம் கடுமையாக்கப்படும்போது நிலைமை மோசமாகிவிடும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தற்போதுள்ள பெரும்பாலான கோயில்கள் பிரிட்டிஷ் காலத்திலிருந்து கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் நில நிலை மாறுவதற்கு முன்பு வரை அவற்றின் அசல் இடங்களில் உள்ளன. இதனால் அவற்றில் பல வாடகை நிலத்தில் உள்ளன.

இது சம்பந்தமாக, கோயில் நிர்வாகத்திற்கு, குறிப்பாக இடமாற்ற அறிவிப்புகளைப் பெற்றவர்களுக்கு, நிலப் பிரச்சினைகள் தொடர்பாக வழிகாட்டுதல்களைப் பெறவும் தீர்வுகளைக் காணவும் உதவ மஹிமா  தயாராக உள்ளது.

கோயில் நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு ஆலோசனை பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நிலைமை மிகவும் சிக்கலாகும் வரை காத்திருக்க வேண்டாம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்